Thursday, April 29, 2010

அந்தமொன்றில்லா ஆனந்தம்!

அல்லி வாய் திறந்து
அலறுகின்ற இருட்பொழுதின்
கொல்லும் கனவுகள்
மிகக்கொடுமை..!

நெஞ்சுப்பயம் தவிர்க்க
பூட்டிவைத்த மனக்கதவு
கொஞ்ச நேரம்போய்
இரண்டாஞ் சாமத்தில்
உள் மனமெல்லாம் வேர்வை
காற்று வர
எள்ளவு கூட
இடமில்லாக் கதவிறுக்கம்,

திடீரென்றொரு காற்று,
எனக்கு பிடித்த மணம்,
படீரென்று பெருஞ்சத்தம்
மனக்கதவடிக்கிறது..!

பூட்டியதைச்சரி பார்த்து
சாவியை எடுத்துவைத்தேன்
ஆட்டியது காற்று
கதவு நிலை கழன்று விழ
அப்படியே பொடிப்பொடியாய்
கதவுடைந்து காலடியில்..

உள்ளே வேர்த்திருந்த
நீர்த்துளியில் அதுபட்டு
உள் மட்டுமல்ல
என் புறமும் குளிர்கிறது,
கணப்பொழுதில் மனம் முழுதும்
நீர்ச்சோலை, இசைக்குயில்கள்
மணம் மட்டும் எனக்கு
எப்போதும் பிடித்த மணம்,

உருவம் கூட இப்ப
ஓரளவு தெரிகிறது,
கரு கரென் றிருந்தாலும்
காற்றுக்கு பறக்கும் முடி,
பருவத்திற்கேற்ப நெற்றி எங்கும்
பாற் பருக்கள்,
கர்வமெல்லாம் பறக்கின்ற
கவனிப்பு, அது இருக்க

எக்கனவும் நுளையேலா
மனக்கதவுத் தாட்பாளை
சுக்கு நூறாய்ச்சிதற வைத்து
கதவினையும் பெயர்த்தெறிந்து
எப்படி இக்கனவு மட்டும்
நாளாந்தம் உள் வருது..?

ஆனால்

’இப்பொழுதும் கதவுச்சாவி
என் இடுப்பில்’

1 comment:

Post a Comment