ஓசைப்படாமல் இருத்தலில்
உள்ளேயே
ஓராயிரம் கோடி
உணர்வுகளைச் சுமந்தபடி
ஆசைகளை எல்லாம்
அனுபவித்துப் பார்க்கையிலே
’ஆண்டவனின் குணமே’
மெளனமே..
உனக்கிணையாய்
எந்த ஒரு குருவும்
எச்சகத்தும் இல்லையப்பா..!
’இசையின் உறை நிலையே
இங்கிதத்தின் அடிப்படையே’
எத்தனையோ உயிர் காத்த
ஆயுதமே..
“மனமொன்றி
முத்தாய்க் கணச்சூட்டில்
வேர்வைப் பூ பிறப்பெடுக்க
அகன்ற விழி கவ்வுதலால்
அரை விழியாய் ஆகிவிட
எல்லா உணர்வுகளும்
ஓர் மையப் புள்ளிக்குள்
தியான நிலையடைய
திசை மறந்து ஒன்றாகும்
உச்சக் கலவியின் பின்
உள்ளாடும் ஓர் அமைதி
மூச்சை உரை பெயர்க்கும்
முழுமை நிறை வாழ்வியலை
எந்த மொழி உரைத்து விடக்கூடும்”..?
என் நிம்மதியே..
மீளேலாத் துயரெல்லாம்
விதி என்று தெருள்கின்ற
காரியத் தெளிவல்லவா நீ
கடவுளின் மொழியல்லவா..!
ஆழத்தின் உருவும் நீ
ஞானத்தின் தெளிவும் நீ
ஊழியின் முடிவல்லவா நீ
உண்மையின் வடிவல்லவா..!
யாரென்ன நொந்தாலும்
யாரென்ன செய்தாலும்
பக்குவம் தருவாயடா
பாவ மன்னிப்பாய் வரு(ம்)வாயடா..!
நீ இல்லா இடமெல்லாம்
நிச்சயமாய்ச் சுடுகாடே
அட கொஞ்சம் பொறுப்பாயடா நீ
அங்கே தான் பிறப்பாயடா..!
Monday, April 12, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment