Monday, April 12, 2010

மோனம்!


அறிவு தெரிந்த முதல்

இன்று வரை

உலகத்தில்

என்னால் எவரும்

’வருந்தி வயிறெரிந்ததில்லை

யாராலும் நானும் வருந்தவில்லை’

என்கின்ற

முழுமை நினைவோடு

கால் நீட்டிப் படுத்து

மெல்ல மெல்லக் கண்மூடி

திருப்தியாய் மூச்சை

இழுத்துவிட்டு நினைவுகளை

நிதானமாய்ச் சுமந்தபடி

’நீள் துயிலில் மூழ்குகையில்’,

கணமேனும்

மனமுடைந்து போகாதே..

கண் கலங்கி

கை கால் வேர்த்துதறக்

கடந்தவற்றை எண்ணாதே..

என்னோடு நீ இருந்த

இமை படக்கும் வேளைகளை

உன் கணவன் இயல்போடு

ஒப்பிட்டுப் பார்க்காதே..

’வேர்வை மணம் தூண்டும்

விறைப்பான நினைவுகளை’

போர்வைக்கு(ள்) அவன் மார்பில்

புரிவதற்கு முயலாதே..

உன் மகனை

என்னுருவாய்க் கண்டு

நெஞ்சோடு

இறுகப் பிடித்தணைத்து

செவி வருடி பாற்தனத்தால்

’என்னில் நீ மொண்ட

சுவை நரம்புக் கவிதைகளை

முதல் முத்தச் சிலிர்போடு ஊட்டு’

மனக்காயம்

ஆறித் தணியுமட்டும்

அழு

தெளிந்து சிரிப்பு வரும்,

பழங்கதை

என்றெண்ணிச் சிரிக்காதே

அழுகை வரும்..

No comments:

Post a Comment